மனைவியுடன் நீதிமன்றம் வந்தவர் திடீர் மரணம்!
மனைவியுடன் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு வந்த 51 வயதுடைய கணவர் ஒருவர், நீதிமன்ற வளாகத்திற்குள் திடீரென நோய்வாய்ப்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக மத்துகம தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர், நயபட அரப்பலகந்தவத்தை பகுதியைச் சேர்ந்த மாடசாமி சந்திர மோகன் என்ற ஒரு பிள்ளையின் தந்தை ஆவார்.

தனது மனைவியின் பெயரில் இருந்த வழக்கு விசாரணைக்காக, அவருடன் மத்துகம நீதவான் நீதிமன்றத்திற்கு வந்திருந்த அவர், நீதிமன்ற வளாகத்தில் அமர்ந்திருந்த போதே திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
அவசர கால ஆம்புலன்ஸ் சேவை மூலம் அவர் மத்துகம வஹத்தேவ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
சடலம் மீதான மரண விசாரணை மத்துகம அவசர கால மரண விசாரணை அதிகாரி அசங்க உதய பண்டார லியனகேயேனால்மேற்கொள்ளப்பட்டது.
மேலதிக விசாரணைகளுக்காகச் சடலம் நீதிமன்ற மருத்துவ அதிகாரி கே.எம்.பி.எம். குணதிலகவிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்துகம தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.