நாட்டின் அடுத்த 6 வாரங்கள் மிகவும் சவால் மிக்கது!
நாட்டில் கொவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் சிகிச்சைக்கு தேவையான ஒட்சிசன் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கான தேவைப்பாடு 70 வீதம் வரை காணப்படுவதால் வாரத்திற்கு 100 தொன் ஒட்சிசனை இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்ய உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முணசிங்க தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில் , கொவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள சடுதியான அதிகரிப்பு காரணமாக நாளொன்றுக்கான ஒட்சிசன் தேவை 70 வீதமாக உள்ளது. 25 வீதத்திலிருந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டின் ஒட்சிசன் உற்பத்தி அந்த அளவில் இல்லை. ஆனால் களஞ்சியப்படுத்தப்பட்ட ஒட்சிசன் தொகையை கொண்டு தேவையை பூர்த்தி செய்கின்றோம். நீண்ட நாட்களுக்கு உள்நாட்டின் இருப்பு சாத்தியப்படாது என்பதால் இந்தியாவிலிருந்து ஒட்சிசனை கொள்வனவு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இந்த வாரத்தில் 100 தொன் ஒட்சிசன் கொள்வனவு செய்யப்பட உள்ளது. ஒவ்வொரு வாரமும் 100 தொன் கொள்வனவு செய்யவே தற்போதைக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேவைப்பாடு ஏற்படும் பட்சத்தில் கொள்வனவு தொகையை 150 தொடக்கம் 200 தொன் வரை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரிலிருந்து ஒட்சிசன் கொள்வனவு செய்வது குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்தியா எமது கொள்வனவு கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளது. எனவே அடுத்து வரும் 6 வாரங்கள் சவால் மிக்கதால் கூடுதலான ஒட்சிசன் தேவைப்பாடும் அதிகரிக்கலாம் என குறிப்பிட்டார்.