பாதுகாப்பு உத்தியோகத்தரின் உயிரை பறித்த யானை!
திருகோணமலை - கோமரங்கடவல பகுதியில் இன்று (06) காலை யானை தாக்குதலினால் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் கோமரங்கடவல - கரக்கஹவெவ பகுதியில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான ஆனந்த காமினி வத்தேவெவ (44 வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இதன்போது கோமரங்கடவல ரிதீபுர பகுதியில் கடந்த ஒரு வார காலமாக யானையின் அட்டகாசம் அதிகரித்து வந்த நிலையில், வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளுடன் இணைந்து கிராம மக்கள் யானையை விரட்டுவதற்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில் யானை குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரை தாக்கியதாகவும் சம்பவ இடத்திலேயே குறித்த சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் கோமரங்கடவல பிரதேச வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் விசாரணைகளை கோமரங்கடவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.