பாலுணர்வை தூண்டும் மாத்திரையால் வந்த வினை ; படுக்கையிலேயே உயிரிழந்த 28 வயது இளைஞர்
இந்தியா சென்னை - ஹரியானா மாநிலம் குருகிராம் நகரில் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உத்தரப் பிரதேசத்த மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ரோஹித் லால் என்பவர், குருகிராமில் வேலை செய்து வந்தார்.
சமீபத்தில் இவரது திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றிருந்தது. சம்பவத்தன்று, பணிக்கு செல்லாததால் சந்தேகமடைந்த நண்பர்கள் அவரை தொடர்பு கொள்ள முயன்றனர்.

நீண்ட நேரமாகியும் பதில் கிடைக்காததால், அவர் தங்கியிருந்த இல்லத்திற்கு சென்று பார்த்தபோது கதவு திறக்கப்படாத நிலையில் இருந்தது. இதையடுத்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பார்த்தபோது, ரோஹித் லால் தனது படுக்கையிலேயே உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், சம்பவத்திற்கு முன் அவர் அளவுக்கு அதிகமாக பாலியல் ஊக்க மருந்துகளை உட்கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.
மருத்துவர்களின் ஆரம்பக் கணிப்பின்படி, இந்த மருந்துகளை அதிகளவில் உட்கொண்டதன் விளைவாக மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவ இடத்திலிருந்து சில மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவை ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன், உடற்கூறு பரிசோதனைக்குப் பின்னர் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர், அதிகப்படியான மருந்து உட்கொண்டதே மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிப்பதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் இத்தகைய மருந்துகளை பயன்படுத்துவது உயிருக்கு ஆபத்தானது என்பதை இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளது.
திருமண வாழ்க்கையை எதிர்நோக்கியிருந்த இளைஞரின் திடீர் மரணம், அவரது குடும்பத்தினரையும் உறவினர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.