15 வருடங்களுக்கு பிறகு தனது மகளை பார்த்து நெகிழ்ச்சியடைந்த தமிழ் அரசியல் கைதி!
சிறையில் கடந்த 15 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் நிரபராதி என கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.
இந்நிலையில், மானிப்பாய் வீதி, தாவடியை சேர்ந்த 45 வயதான தேவராசா சிவபாலன் என்பவரே இவ்வாறு விடுதலையாகியுள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டு ஆயுதங்களை கொழும்புக்கு கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில், வத்தளை பகுதியில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் 2 ஆண்டு கால விசாரணைகளின் அடுத்து, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கொழும்பு நீதிமன்றில் அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைகளுக்காக கடந்த 15 வருட காலமாக நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.
இதனையடுத்து கடந்த 14 -12-2021 ஆம் திகதி அவருக்கு எதிரான வழக்கில் அவரை நிரபராதி என கண்ட கொழும்பு மேல் நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தது.
மேலும் அவர் கைது செய்யப்பட்ட போது அவரது மகளுக்கு ஒரு வயதும் நிரம்பாத நிலையில், தற்போது அவர் விடுவிக்கப்பட்டதும், தனது மகளை 15 வருடங்களின் பின் கண்டு நெகிழ்ச்சியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.