விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கி சூட்டில் தமிழ் குடும்பஸ்தர் உயிரிழப்பு
அனுராதபுரத்தில் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் வவுனியா கற்பகபுரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்ற 41 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு
கடந்த 27 ஆம் திகதி இரவு அநுராதபுரம் மாவட்டத்தின் கெப்பிற்றிக் கொல்லாவ பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த கப்ரக வாகனத்தை அந்த பகுதியில் கடமையில் இருந்த விசேட அதிரடிப்படையினர் வழிமறித்துள்ளனர்.
இதன்போது குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்றதால் விசேட அதிரடிப்படையினரால் அந்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளது. இதன்போது அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்திருந்தனர்.
அத்துடன் பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த நிக்சன் என்ற இளைஞர் காயமடைந்துள்ளார். காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவரது நிலமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் காலை உயிரிழந்த நிலையில், சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.