தமிழர் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரால் பரபரப்பு
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவையாறு இரண்டாம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஒரே இடத்தில் குறித்த வாகனம் நீண்ட நேரமாக நிறுத்தப்பட்டிருந்ததை அவதானித்த பிரதேச மக்கள், இதுகுறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், காரை கைப்பற்றி மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், குறித்த வாகனம் வடக்கு பகுதிக்கு கொண்டு வரப்பட்டு கொள்ளைச் சம்பவம் அல்லது வேறு ஏதேனும் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.