யாழில் உயிரிழந்த அரச உத்தியோகஸ்தர் ; நீதிகோரி தந்தை முறைப்பாடு
யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த, யாழ்ப்பாணம் - தென்மராட்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலரான ஒரு பிள்ளையின் தாயான இளம் குடும்ப பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக தந்தையார் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த மேற்படி பெண் உயிரிழந்தார்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இந்நிலையில் உயிரிழந்த பிரதேச செயலக உதவி பிரதேச செயலரின் தந்தை , தனது மகளின் உடலில் தீ பற்றியமை தொடர்பில் சந்தேகம் உள்ளதாக , கடந்த 23ஆம் திகதி கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அவரது மரணத்தைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் இது ஒரு இயற்கையான நிகழ்வு அல்ல, மாறாக ஒரு சந்தேகத்திற்குரிய கொலை என்பதை வலுவாகக் காட்டுகின்றன.
இத்தகைய குற்றத்தின் கடுமையான தாக்கங்களைக் கருத்தில் கொண்டு, ஒரு முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை விரைவில் நடத்தப்படுவதை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறோம் என , மகளை பறிகொடுத்த தந்தை முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ் . போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த தென்மராட்சி பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் கடந்த 17ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியை சேர்ந்த 33 வயதான ஆறு மாத கர்ப்பிணியே உயிரிழந்தவர் ஆவார்,
கடந்த 14ஆம் திகதி படுக்கையறையில் இருந்த நுளம்புத்திரி தவறுதலாக படுக்கையில் பட்டு தீப்பற்றியதாக கூறப்பட்டு மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டு சிகிற்சை பலனின்றி பெண் உயிரிழந்தார்.
எனினும், பெண்ணின் மரணத்தில் மர்மம் நிலவுவதாக பெண்ணுக்கு நெருக்கமானவர்கள் கூறி வந்தமை குறிப்பிடத்தக்கது.