பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு தப்பிய சந்தேகநபர் கைது
கட்டுநாயக்க, தேவமொட்டாவ பகுதியில் இன்று (15) பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோத்தர் மீது அவரது கடமை நேர துப்பாக்கியால் துப்பாக்கி பிரயோகத்தை நடத்தி விட்டு சந்தேகநபர் தப்பிச் சென்றிருந்தார்.
அவரை கைது செய்வதற்காக பொலிஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று மாலை வேளையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்ந்தும் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவர், அந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைநேர துப்பாக்கியைப் பறித்து இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பியோடியிருந்தார்.
கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் செயற்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
இதன்போது தேவமொட்டாவ பகுதியில் வைத்து சந்தேகநபரை நிறுத்தி விசாரணை செய்த பின்னர், அவரைப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சந்தேகநபரைப் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த போது, ஒரு பொலிஸ் அதிகாரி சந்தேகநபர் வந்த மோட்டார் சைக்கிளை எடுத்து வருவதற்காகச் சென்றுள்ளார்.
அவ்வேளையில், மற்றைய அதிகாரியுடன் இருந்த சந்தேகநபர், உடனடியாகச் செயற்பட்டு அந்த உத்தியோகத்தரிடம் இருந்த கடமைநேர துப்பாக்கியைப் பறித்து, அவர் மீது துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு வேறொரு மோட்டார் சைக்கிளில் தப்பியோடியமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.