வவுனியாவிற்கு திடீரென விஜயம் மேற்கொண்ட நாமல் ராஜபக்ஷ
வவுனியாவிற்கு முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) இன்றையதினம் வருகை தந்து கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஏற்பாடு செய்த சந்திப்புக்களில் கலந்து கொண்டார்.
வவுனியா அருந்ததி விருந்தினர் விடுதியில் இன்று செவ்வாய்கிழமை (27.09-2022) குறித்த சந்திப்புக்கள் இடம்பெற்றதுடன் இந்த சந்திப்புக்களுக்கு ஊடகங்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் அவர்களின் ஏற்பாட்டில் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டவர்களுடன் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
மேலும், குறித்த கலந்துரையாடல்களில் அடுத்துவரும் உள்ளுராட்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் மீளவும் பொதுஜன பெரமுனவின் ஆட்சியை புதிய கூட்டணியாக மலரச் செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டப்பட்டதாகவும், மக்களின் பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்து கொண்டதாகவும் அதில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.