மரணம் நெருங்குவதாக உணர்கிறேன் ; கண்தான ஆவணங்களை கோரிய சுரேஷ் சலே
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, தமது உடல்நிலை குறித்து கடும் அச்சம் வெளியிட்டுள்ளதுடன், கண்களைத் தானம் செய்வதற்கும் இறுதி உயில் சாசனத்தைத் தயாரிப்பதற்கும் தேவையான ஆவணங்களை உடனடியாகக் கொண்டு வருமாறு தனது சட்டத்தரணிகளிடம் அறிவித்துள்ளதாக அவரது சட்டத்தரணிகள் இன்று (07) தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், சுரேஷ் சலே தனது இறுதி விருப்பங்களை சட்டரீதியாகப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கருதுவதால், அதற்குத் தேவையான ஆவணங்களுடன் சட்டத்தரணிகள் உடனடியாக அவரைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
சுயாதீன மருத்துவ பரிசோதனை கோரிக்கை
அதேவேளை, சலே தற்போது தங்க வைக்கப்பட்டுள்ள சூழ்நிலை அவரது உடல்நிலைக்கு ஏற்றதாக இல்லையெனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அவரை தேவையான வசதிகளைக் கொண்ட வைத்தியசாலை ஒன்றிற்கு மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும், அவரது உடல்நிலையை மதிப்பீடு செய்வதற்காக சுயாதீன மருத்துவ நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்குமாறும் அந்தக் கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சுரேஷ் சலேயின் உடல்நலம் மற்றும் நலன் வேண்டி ‘சர்வஜன அதிகாரம்’ அமைப்பின் ஏற்பாட்டில் பிரித் பாராயண நிகழ்வு ஒன்று இன்று மாலை பெல்லன்வில ரஜமகா விகாரையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அவரது மனைவி மனோரி சலே மற்றும் மகனும் கலந்துகொண்டனர். மேலும், சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த சில அரசியல் கட்சிகள் நாளை (08) காலை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொடர் சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை ஆரம்பிக்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் கீழ் கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் அவர் தொடர்ந்து அந்தத் திணைக்களத்தின் பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில நேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் தமக்கு சித்திரவதை மேற்கொள்ளப்படுவதாகக் கூறி சுரேஷ் சலே உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
எனினும், அந்தக் குற்றச்சாட்டுகளை இலங்கை பொலிஸார் மறுத்துள்ளனர். நேற்று இரவு வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், உதய கம்மன்பில முன்வைத்த குற்றச்சாட்டுகள் உண்மைக்குப் புறம்பானவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், சுரேஷ் சலே மீது எந்தவித தாக்குதலோ அல்லது மனிதாபிமானமற்ற நடத்தையோ மேற்கொள்ளப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில், சுரேஷ் சலேயின் மனைவி மனோரி சலே, தனது கணவரின் பாதுகாப்பு மற்றும் உடல்நிலை தொடர்பில் கவலை வெளியிட்டு, பொலிஸ் மா அதிபருக்கு எழுத்துப்பூர்வமான முறைப்பாடு ஒன்றையும் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.