விசாரணைகள் குறித்து சுரேஷ் சலேவின் மனைவி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்
தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலேயின் மனைவியான மனோரி சலே, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குள் சுரேஷ் சலே மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக சுயாதீன விசாரணை நடத்துமாறு கோரியே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விசாரணை
தடுப்புக் காவலில் உள்ள தமது கணவருக்கு சித்திரவதை செய்தமை, கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியமை, அதிகார துஷ்பிரயோகம், மருத்துவ சிகிச்சை மறுக்கப்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு அவர் அக்கடிதத்தில் கோரியுள்ளார்.
நேற்று (06) தமது மகனையும் சகோதரனையும் சந்தித்த போது சுரேஷ் சலே வழங்கிய தகவல்களின் அடிப்படையில், 10 விடயங்களை இக்கடிதத்தின் மூலம் பொலிஸ் மா அதிபருக்கு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதுள்ள சூழ்நிலையில் அவரது உயிர் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் அடிப்படை உரிமைகள் குறித்து கடுமையான பிரச்சினை எழுந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
தனது கணவரின் ஆரோக்கிய நிலை குறித்து மிகுந்த கவனம் செலுத்தி உடனடியாக தலையிடுமாறு மனோரி சலே இக்கடிதத்தின் ஊடாக பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.