ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17 ஆம் திகதி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த அப்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகளின் ஊடாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவால் பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தின் இரண்டாவது சரத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் தன்னிச்சையானவை மற்றும் அதிகாரமற்றவை என்று மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்ப்பளித்தனர்.
உயர் நீதிமன்ற அமர்வு
தலைமை நீதியரசர் முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோத்தாகொட ஆகிய பெரும்பான்மை நீதியரசர்கள் இந்த தீர்ப்பை வழங்கினர்.
இருப்பினும், மூவரடங்கிய நீதியரசர்கள் அமர்வின் உறுப்பினரான நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர, தனது தீர்ப்பை வழங்கும்போது, பதில் ஜனாதிபதியின் அவசரகாலச் சட்ட பிரகடனம் ஊடாக அடிப்படை மனித உரிமைகளை மீறப்படவில்லை என்று கூறினார்.
மாற்றுக் கொள்கை மையம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையளார் அம்பிகா சற்குணநாதன் மற்றும் லிபரல் இளைஞர் இயக்கம் ஆகியவை இந்த அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.
மனுதாரர்களின் வழக்கு கட்டணங்களை அரசாங்கம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டது.