இளங்குமரனுக்கு எதிராக சுமந்திரன் அவமதிப்பு வழக்கு
தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனுக்கும், கஜபாகு என்பவருக்கும் எதிராக முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இளங்குமரன் எம்.பி.சார்பாக ஆஜரான சட்டத்தரணி சாமர நாணயக்கார, கஜபாகுவுக்கு சட்டத்தரணி ஒருவரை நியமிப்பதற்கு கால அவகாசம் கோரியதால் வழக்கு அடுத்தவரும் பெப்ரவரி 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
மேன் முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெனாண்டோ ஆகியோரைக் கொண்ட அமர்வின் முன்பாக நேற்றையதினம் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இளங்குமரன் எம்.பி.மற்றும் கஜபாகு ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்ததோடு மனுதாரரான சுமந்திரன் சார்பாக சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின் பேரில் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி கனகஈஸ்வரன் ஆஜராகி இருந்தார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் அகதியாக தஞ்சம் கோரியிருந்த சின்னையா சிறிலோகநாதன் அங்கிருந்து கடந்த மே 29ஆம் திகதி பலாலி விமான நிலையம் ஊடாக வருகை தந்திருந்த நிலையில் அவர் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் 30ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, சின்னையா சிறிலோகநாதனின் புதல்வரின் கோரிக்கைக்கு அமைவாக எம்.ஏ.சுமந்திரன் மன்றில் ஆஜராகியிருந்தார்.
எனினும் நீதிவான் சின்னையா சிறிலோகநாதனை விளக்கமறியலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி அளித்திருந்தார். அதற்கு மறுதினம், இளங்குமரன் எம்.பி. உள்ளிட்டவர்கள் பிறிதொரு சட்டத்திரணி ஊடாக மனுத்தாக்க நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
அதன்பின்னர் நீதிமன்றிற்கு அருகில் வைத்து இளங்குமரன் எம்.பி.உள்ளிட்டவர்கள் சுமந்தினை மையப்படுத்தி சிறிலோகநாதன் விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு சுமந்திரன் காரணம் என்ற சாரப்படத் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் , இளங்குமரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சுமந்திரன் தாக்கல் செயய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.