சார்ஜ் போட சென்றவர் மனைவியை அணைத்ததால் கத்திக்குத்தில் முடிந்த சம்பவம்
பெண் ஒருவர் கூறிய பொய்யால் இடம்பெற்ற கத்தி குத்தில் ஒருவர் படுகாயமடைந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (16) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் மொனராகலை, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவின் மஹா பெலஸ்ஸ பகுதியில், இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த நபர் மாமடல பல்லேரொட்ட பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பெண் கூறிய பொய்
குறித்த நபர் நான்கு மாதங்களுக்கு முன்னர் மஹா பெலஸ்ஸ பகுதியைச் சேர்ந்த சூடி மாத்தியா என்ற நபரின் விவசாய பணிகள் மற்றும் மாடுகளை பராமரிப்பதற்காக வந்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் (16) அன்று இரவு குறித்த நபர் சூடி மாத்தியாவின் மகனான பன்டி என்பவரின் மனைவியின் அறையில் கைத்தொலைபேசியை சார்ஜ் போட்டு வைத்துள்ளார்.
பன்டியின் மனைவி சார்ஜ் போட்டிருந்த கைத்தொலைபேசியை எடுத்து அழைப்பொன்றை விடுத்ததனால் கோபமடைந்த நபர் அவ்வாறு செய்ய வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் கோபமடைந்த பெண் அந்த நபர் தன்னை கட்டியனைத்ததாக தனது மாமனாரும் வீட்டின் உரிமையாளருமான சூடி மாத்தியாவிடம் கூறியதையடுத்து அவர் குறித்த நபரை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.
வீட்டை விட்டு வெளியேறி செல்லும் வழியில், பெண்ணின் கணவரான பன்டி ஒரு டார்ச் லைட் மற்றும் மீன் கத்தியுடன் அவரைப் பின் தொடர்ந்துள்ளார். குறித்த நபர் அவரிடம் இருந்து தப்பிக்க அருகிலுள்ள ஏரியில் குதித்துள்ளார்.
அந்த நேரத்தில், பன்டியும் ஏரியில் குதித்து, மீன் வெட்டும் கத்தியால் அவரது இடது கையில் குத்தியுள்ளார். பின்னர் அவர் ஏரியிலிருந்து நீந்தி, தப்பி வந்து மறைந்து, ஆம்புலன்ஸ் ஒன்றை அழைத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பின்னர் அவர் மேலதிக சிகிச்சைக்காக எம்பிலிப்பிட்டிய பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சந்தேக நபர் தஹய்யாகலை நேப பெலெஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய பன்டி என்றழைக்கப்படும் தரிந்து என தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர் மற்றும் சான்றுப் பொருட்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.