லண்டன் நகர சபை ஒன்றின் மேயராக தெரிவான இலங்கைத் தமிழர்
லண்டனின் கிங்ஸ்டன் அப்போன் தேம்ஸ் அரச நகராட்சியின் புதிய மேயராக இலங்கைப் பிறப்புடைய கவுன்சிலர் தாய் தயாளன் நியமிக்கப்பட்டுள்ளார்.
2026 ஆம் ஆண்டு மே 21 ஆம் திகதி நடைபெற்ற வருடாந்திர மன்றக் கூட்டத்தில் இந்த நியமனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இலங்கையில் பிறந்த தாய் தயாளன், 1970 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்ததுடன், 1976 ஆம் ஆண்டு முதல் கிங்ஸ்டன் பகுதியில் வசித்து வருகிறார்.

2014 ஆம் ஆண்டு டோல்வொர்த் வார்டின் கவுன்சிலராக முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், மக்கள் சேவையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதற்கு முன்னர் 2018 முதல் 2019 வரையிலான காலப்பகுதியில் கிங்ஸ்டன் மேயராகப் பதவி வகித்த அவர், பன்முகத்தன்மை, இளைஞர் மேம்பாடு மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்திருந்தார்.
மேலும், ஐ.டி.சி தமிழ் மையத்தின் நிறுவன உறுப்பினராகவும் தற்போதைய புரவலராகவும் உள்ள அவர், 1986 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கிங்ஸ்டன் தமிழ்ப் பள்ளியின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறார்.
இந்தப் பள்ளி மூலம் 250-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு தமிழ் மொழி, கலை, பாரம்பரியம் மற்றும் பண்பாடு கற்பிக்கப்பட்டு வருகிறது.
கிங்ஸ்டன் இன மற்றும் சமத்துவ மன்றத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரான தாய் தயாளன், நகரின் பன்முகத்தன்மையை கொண்டாடும் வகையில் ‘கிங்ஸ்டன் திருவிழா’ உருவாக்கத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.
சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கும் சமூகக் கட்டமைப்பு மற்றும் இனவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பல தசாப்தங்களாக ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி, 1990 ஆம் ஆண்டு சமூக சேவைக்கான கிங்ஸ்டன் மேயர் விருதும், 2020 ஆம் ஆண்டு லிபரல் டெமாக்ரட் தலைவர் விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.