இலங்கையில் வெளிநாட்டு பிரஜையொருவருக்கு ஓமிக்ரோன் உறுதி!
இலங்கையில் புதிதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள Omicron வைரஸ் தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டு பிரஜையாவார் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
இன்று (17-12-2021) வெள்ளிக்கிழமை சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறுனார்.
வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களுக்கு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்ட சில மாதிரிகள், கொரோனா பிறழ்வை இனங்காண்பதற்கான ஆய்வுகூட பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அவ்வாறு அனுப்பட்ட மாதரிகளிலேயே புதிய Omicron தொற்றாளர்கள் நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் வெளிநாட்டு பிரஜை ஒருவர் ஆவார். இவர் நாட்டுக்கு வருகை தந்து பின்னர் நாட்டிலிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், தொற்று நோயியல் பிரிவினால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குறித்த நபர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர் நாட்டிலிருந்து வெளியேறவில்லை என்றும், இலங்கையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தொற்று நோயியல் பிரிவு எமக்கு அறிவித்துள்ளது.
குறித்த வெளிநாட்டு பிரஜை ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவராவார். தொற்றிலிருந்து குணமடைந்த பின்னர் அவர் செய்து கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் கொவிட் தொற்று ஏற்படவில்லை என்ற முடிவு கிடைத்துள்ளது. இதனால் குறித்த நபர் நாட்டுக்கு வருவதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனையை செய்து கொள்ளவில்லை.
எனினும் அவரிடம் குறித்த பி.சி.ஆர். இன்மையால் இலங்கைக்குள் வந்தவுடன் விமான நிலையத்தில் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது பெற்றுக் கொண்ட மாதிரியிலேயே அவருக்கு Omicron தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
குறித்த நபர் வேறு ஏதேனும் இடங்களுக்குச் சென்றுள்ளாரா என்பது தொடர்பான தகவல்கள் அவர் தங்கியிருந்த சுகாதார மருத்துல அதிகாரி பிரிவினால் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.