பெலியத்த ஐவர் படுகொலை: சந்தேக நபருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!
பெலியத்தவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு தெய்யன்னாதர நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன்படி, சந்தேக நபர் எதிர்வரும் ஜனவரி மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய ஜீப்பின் சாரதி என அடையாளம் காணப்பட்டதோடு, செவ்வாய்கிழமை (23) நடந்த துப்பாக்கிச் சூட்டைத் திட்டமிட்டுச் செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
சந்தேக நபர் இன்று (24) அக்குரஸ்ஸ, மலிதுவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன், அதற்கு முன்னதாக, காலி வித்யாலோக பிரிவெனாவிற்கு அருகாமையில், கொலையாளிகள் பயன்படுத்திய வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதேவேளை, மாத்தறை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் மேற்பார்வையில் ஹக்மன பொலிஸ் அதிகாரிகள் குழுவினால் விசாரணைகள் இடம்பெற்றது.
தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு T-56 துப்பாக்கிகளை அப்புறப்படுத்த மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குற்றச் சம்பவத்தின் பின்னர் சந்தேகநபர்கள் தலைமறைவாகும் வகையில் வேன் தயார் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த ஜீப்பில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களில் ஒருவர் அக்குரஸ்ஸ பகுதியில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகவும், மற்றொரு துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கம்புருப்பிட்டிய பகுதியில் இருந்து இறக்கிவிடப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் விசாரணையின் போது, கொலைக்கான ஒப்பந்தத்தை வழங்கிய டுபாயில் உள்ள பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூடு நடத்திய மற்றைய நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், தங்காலை நீதிமன்றத்திற்கு அருகில் தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் சந்தேக நபர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான றோயல் பீச் சமன் உள்ளிட்ட குழுவினர் குறித்த தகவல்களை கொலையாளிகளுக்கு வேறு ஒருவர் வழங்கியமையினால் கையடக்கத் தொலைபேசி பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக விசாரணை அதிகாரி ஒருவர் அத தெரணவிடம் தெரிவித்தார்.
அத்துடன், சந்தேகநபரின் வங்கிக் கணக்குகள் பரிசோதிக்கப்பட உள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.