உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர் மனைவியுடன் பிரித்தானியாவில் தஞ்சம்!
இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்த ஒருவர் பிரித்தானியாவில் தஞ்சம் கோரியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது நாட்டுக்குத் திரும்பினால் தாமும் தமது குடும்பமும் பல்வேறு பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவித்தே அவர் தஞ்சம் கோரியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அதிகாரிகள் பிடியாணை
முன்னதாக, அவர் 2022 ஜனவரியில் இலங்கை அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் சில மாதங்களுக்குப் பின்னர் அவர், தமது மனைவியுடன் இலங்கையிலிருந்து பிரித்தானியாவுக்கு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையிலேயே அவரும் அவரின் மனைவியும் பிரித்தானியாவில் அடைக்கலம் கோரியுள்ளனர்.
இதேவேளை, பிரித்தானியாவுக்கு சென்று இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அவரை சந்தேக நபராகக் கருதி இலங்கை அதிகாரிகள் பிடியாணை பிறப்பித்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அவரது புகலிட கோரிக்கையை பிரித்தானியா நிராகரித்ததாகக் கூறப்படுகிறது.
அத்துடன், அந்த முடிவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீடும் இந்த ஆண்டு மார்ச் மாதம் குடியேற்ற தீர்ப்பாய நீதிபதி ஒருவரால் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.