இனப்படுகொலை என கூறக்கூடாதா? அம்பிகா சற்குணநாதன் கேள்வி
மட்டக்களப்பில் இனப்படுகொலை என்ற பதாகையை வைத்திருந்தமைக்காக இளைஞர் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இந்நிலையில் அந்த சம்பவத்தை சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் , இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்துவது தவறா என கேள்வி எழுப்பியுள்ளார் .
தமிழ் இனப்படுகொலை நினைவுநாள்
இது தொடர்பில் அவர் தனது டுவிட்டர் பதிவில், மட்டக்களப்பு ஆயித்தியமலை நரிபுல்தோட்டத்தில் மே18 ம் திகதியை நினைவுகூறுவதற்கான நிகழ்வை ஏஎச்ஏம் என்ற மனிதவள நிலையம் ஏற்பாடு செய்திருந்தது.
தமிழ் இனப்படுகொலை நினைவுநாள் என்ற பதாகையை வைத்திருந்தமைக்காக ஏஎச்ஏம் அமைப்பின் பணியாளர் பத்மநாதன் சிரோஜனை ஆயித்தியமலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இலங்கையில் இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்துவது சட்டவிரோதமானதா? நடந்தது இனப்படுகொலையா அல்லது வேறு பாரதூரமான குற்றமா என்பது குறித்து இலங்கை இணக்க மறுக்கலாம் விவாதிக்கலாம், ஆனால் இனப்படுகொலை என்ற சொல்லை பயன்படுத்துவதும் அது குறித்து விவாதிப்பதும் இனப்படுகொலை இடம்பெற்றதாக விவாதிப்பதும் சட்டவிரோதமானது இல்லை அவ்வாறு கருதமுடியாது.
அதேசமயம் கைதுசெய்யப்பட்டவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்,அவரை நிபந்தனையற்ற விதத்தில் விடுதலை செய்வதற்கு பல்வேறு தரப்பினரின் உத்தரவாதம் தேவை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவர் எந்த சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார், பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தால் இவ்வாறான கைதுகள் வழமையான விடயமாகிவிடும் எனவும் அம்பிகா சற்குணநாதன் பதிவிட்டுள்ளார்.