கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு ; கம்பஹா ஒஸ்மண்ட் வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்கள்
'கணேமுல்ல சஞ்சீவ' என்பவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒஸ்மண்ட் குணசேகர எனப்படும் ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ என்பவரிடம் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் போது, 'கெஹெல்பத்தர பத்மே' என்பவரின் கறுப்புப் பணத்தை இலங்கைக்குள் இருந்து முழுமையாக வெள்ளையாக்கும் நடவடிக்கைகளை இவரே முன்னெடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
குறித்த கொலைச் சம்பவத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில், ஒஸ்மண்ட் குணசேகர எனப்படும் கம்பஹா ஒஸ்மண்ட் கடந்த 13ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கம்பஹா, ஸ்ரீ போதி வீதிப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவர் கைது செய்யப்பட்ட போது, அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரிப்பீட்டர் ரக துப்பாக்கி ஒன்று, 10 தோட்டாக்கள் மற்றும் 02 மெகசின்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து, சந்தேகநபரான கம்பஹா ஒஸ்மண்டை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
அந்தக் காலப்பகுதி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சந்தேகநபரை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று (16) அனுமதி பெற்றுள்ளனர்.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான கெஹெல்பத்தர பத்மேயுடன் அவர் நெருங்கிய தொடர்பைப் பேணி வந்துள்ளமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அத்துடன், சமூகத்தையும் பொலிஸாரையும் திசைதிருப்பும் நோக்கில், தாங்கள் இருவருக்கும் இடையே கடுமையான பகைமை இருப்பதாக நீண்டகாலமாக அவர்கள் காட்டி வந்துள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
விசாரணை அதிகாரிகளின்படி, கெஹெல்பத்தர பத்மேவிடமிருந்து கம்பஹா ஒஸ்மண்டிற்கு மரண அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறப்பட்ட போதிலும், அவ்வாறான எந்தவொரு அச்சுறுத்தலும் இருந்திருக்கவில்லை என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், பத்மேயின் சகாக்கள் பல சந்தர்ப்பங்களில் கம்பஹா ஒஸ்மண்டை கொலை செய்யத் தயாராக இருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட போதிலும், அவை அனைத்தும் வெறும் நாடகம் என்பதும் அம்பலமாகியுள்ளது.

பத்மேயின் கறுப்புப் பணத்தை இலங்கைக்குள் இருந்து வெள்ளையாக்கும் பணிகளை முழுமையாக கம்பஹா ஒஸ்மண்டே வழிநடத்தியுள்ளார் என்பதை விசாரணை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
சந்தேகநபர் தனது வியாபாரங்கள் ஊடாக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும், கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக கெஹெல்பத்தர பத்மேயிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நடத்திய விசாரணைகளின் போது இவர் குறித்த எந்தவொரு தகவலும் வெளிவரவில்லை.
எனினும், அண்மையில் அஸர்பைஜானில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 'பட்டுவத்தே சாமர' என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகநபரான கம்பஹா ஒஸ்மண்ட் பற்றிய பல முக்கிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
முக்கியமாக, கணேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை கம்பஹா ஒஸ்மண்டே வழங்கியுள்ளார் என்பதும் அதன்போது தெரியவந்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.