ஆயுர்வேத வைத்தியரை கைது செய்ய சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
அம்பாறையில் உள்ள பகுதியொன்றில் அனுமதியின்றி சட்டவிரோதமாக ஆங்கில மருந்து வகைகள் மற்றும் போதையூட்டும் மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த ஆயுள்வேத வைத்தியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
அம்பாறை - பெரிய நீலாவணையில் ஆயுள்வேத நிலையம் ஒன்றில் சட்டவிரோதமாக போதையூட்டும் மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக முறைப்பாடு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த முறைப்பாட்டிற்கமைய, நேற்றிரவு (04-04-2024) பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், மேற்கொண்ட சோதனையில் பல்வேறு வகையிலான ஆங்கில மாத்திரைகள் மற்றும் போதையூட்டும் மாத்திரைகளை கைப்பற்றினர்.
மேலும், 3500 எண்ணிக்கையுடைய ஆங்கில மற்றும் 850 எண்ணிக்கையுடைய போதையூட்டும் மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த 63 வயதான ஆயுள்வேத வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், கைதான சந்தேக நபர் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர், சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.