சிங்கப்பூரில் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனை; விசாரணையில் இருந்து தப்பிக்க ஆடும் நாடகமா?
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ சிங்கப்பூரின் முன்னணி மருத்துவமனையான 'மவுண்ட் எலிசபெத்' மருத்துவமனையில் சிறப்பு மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சுமார் ஒரு வாரமாகச் சிகிச்சை பெற்று வந்த அவர், அங்கிருந்து வெளியேறிய உடனேயே நேரடியாகக் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குச் சென்றார்.

விமான நிலையத்தில் வழங்கப்பட்ட அழைப்பாணை
வாக்குமூலம் அளிப்பதற்கான அறிவித்தல் முதலில் தங்காலையில் உள்ள 'கார்ல்டன் ஹவுஸ்' இல்லத்திற்கு அனுப்பப்பட்டிருந்தது.
அவர் வெளிநாடு செல்லத் தயாராவதை அறிந்த நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் விமான நிலையத்திற்கு விரைந்தனர். ஷிரந்தி ராஜபக்ஷ விமானத்தில் ஏறவிருந்த வேளையில் அந்த அழைப்பாணை அவரிடம் கையளிக்கப்பட்டது.
அவருடன் பயணித்த உறவினர் ஒருவர் அவருக்குப் பதிலாக அந்த ஆவணத்தைப் பெற்றுக்கொண்டார். இருப்பினும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளரான சட்டத்தரணி மனோஜ் கமகே, இது சட்டத்திலிருந்து தப்பிப்பதற்கான முயற்சி என்ற செய்திகளை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

தனது உடல்நலக் குறைபாட்டிற்கான மேலதிக சிகிச்சையைப் பெறுவதற்காகவே இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர் 19-ஆம் திகதி மீண்டும் தீவுக்குத் திரும்பத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் விடுத்த விசேட அறிக்கையில் சுட்டிக்காட்டினார். அதன்படி, திட்டமிட்டபடி 24-ஆம் திகதி அவர் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் முன் ஆஜராவார்.
விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள 'சிரிலியா சவிய' கணக்கு விவகாரம் குறித்து மேலும் தெளிவுபடுத்திய சட்டத்தரணி, மகரகமவில் உள்ள 'அபேக்ஷா' (Apeksha) மருத்துவமனையில் சிறுவர் புற்றுநோயாளிகளுக்காக 'PET ஸ்கேன்' இயந்திரம் ஒன்றை வாங்குவதற்காக அக்காலகட்டத்தில் இலங்க்கை மக்கள் வங்க்கியில் 2 மில்லியன் ரூபா நன்கொடை பெறப்பட்டதாகத் தெரிவித்தார்.
எனினும், சீன அரசாங்கம் அந்த இயந்திரத்தை இலவசமாக வழங்க முன்வந்ததால், திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு சிறுவர்களுக்கான வார்டு (ward) ஒன்றை அமைக்க அறக்கட்டளை தீர்மானித்ததாக அவர் கூறினார்.
அந்தக் கணக்கில் உள்ள நிதியில் எதையும் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷவோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் எவருமோ தனிப்பட்ட பயன்பாட்டிற்குப் பயன்படுத்தவில்லை என்றும் வங்கி' நன்கொடை உட்பட அனைத்து நிதியும் இன்றுவரை அந்தக் கணக்கிலேயே பாதுகாப்பாக இருப்பதாகவும் சட்டத்தரணி மனோஜ் கமகே வலியுறுத்தினார்.
அதேசமயம் தற்போதைய அரசாங்கத்தின் அதிகாரம் தற்காலிகமானது என்பதை நினைவூட்டிய அவர், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் குடும்பத்திலுள்ள பெண்களை ஈடுபடுத்த வேண்டாம் என்று அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, பாரதா கொலைச் சம்பவத்தைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய டுமிண்டா சில்வாவும் சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் நீண்ட காலம் தங்கியிருந்தார்.
அக்காலகட்டத்தில், அந்த மருத்துவமனை அறிக்கைகளைப் பயன்படுத்தி நீண்ட காலத்திற்கு நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து டுமிண்டாவால் தப்பிக்க முடிந்தமைகும் குறிப்பிடத்தக்கது.