சவுதியில் மரணதண்டனை ; கண்ணீருடன் மன்றாடும் அனோஜனின் தாயார்
சவுதியில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அனோஜனின் தாயார் , எமது குடும்பத்தை வாழவைக்கும் எனது அருமை மகனை எப்படியாவது உயிரோடு மீட்டுத்தாருங்கள் என்று அனைவரிடம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" எனச் கதறி அழுது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கல்முனையையடுத்துள்ள நற்பிட்டிமுனையில் உள்ள அவரது இல்லத்தில் வெள்ளிக்கிழமை (18) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கதறி அழுதார். இதன் போது அவர் கூறுகையில்,

எமது குடும்பத்தின் ஆணிவேராக இருப்பவர் அவர்தான்
"அவர் செய்தது தவறுதான் அதற்காக அவரும் மன்னிப்பு கேட்டிருந்தார். நாங்களும் மன்னிப்பு கேட்கின்றோம். ஜம்மியத்துல் உலமா சபை, இலங்கை அரசாங்கம், சவுதி அரசாங்கம், முஸ்லிம், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தயவுசெய்து மீண்டும் ஒருமுறை மன்னித்து, எனது மகனை உயிரோடு மீட்டுத்தாருங்கள். இல்லாவிட்டால் நாங்கள் மூவரும் மரணிப்போம்" என்று கதறி அழுது கூறினார்.
"எமது குடும்பத்தின் ஆணிவேராக இருப்பவர் அவர்தான். அவரது உழைப்பில்தான் நாம் வாழ்க்கையை ஓட்டுகின்றோம். அவருக்கு இந்த கதி என்றால் நாங்கள் நிர்க்கதியாகிவிடுவோம். செய்த தவறுக்கு இது மிகவும் பெரிய தண்டனையாக நினைக்கிறோம். தயவுசெய்து அவர் செய்த தவறை மன்னித்து, அனைவரும் இந்த விடயத்தில் ஒத்துழைத்து அவரை விடுவித்துத்தாருங்கள்" என அனோஜனின் சகோதரர் கூறினார்.
ஊடக சந்திப்பில் ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு அமைச்சகம் என்பவற்றோடு கடந்த காலத்தில் இடம்பெற்ற தொடர்புகள் பற்றிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டன.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், "இது மிகவும் வேதனைக்குரிய தருணமாகப் படுகின்றது.
இது ஓர் உயிருக்கான போராட்டம். இதனையிட்டு நாங்கள் ஏற்கனவே எமது சக முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு அமைச்சர் என்று பலருடனும் பேசியிருக்கின்றோம்; அவர்களும் இணைந்து செயற்படுவதாகக் கூறியுள்ளனர்.
இந்த வேளையில் தேவையற்ற முகநூல் பதிவுகள், கூட்டங்கள், போராட்டங்களைத் தவிர்த்து மனிதாபிமானத்திற்கு வழிவிடுங்கள். தமிழ், முஸ்லிம் மக்கள் அமைப்புக்கள் இணைந்து இந்த விடயத்திலே கோரிக்கை விடுத்து, அனோஜனை உயிரோடு மீட்டெடுக்க வேண்டும்.
இதற்காக எங்களது உச்சகட்ட ஆதரவைத் தருவோம்" என்றார். அச்சமயம், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இ. ரூபசாந்தன், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் ஆலயத் தலைவர்கள் பலரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்கள்.