போலி ஆவணங்கள் மூலம் அரச காணிகள் விற்பனை? மன்னார் மக்களுக்கு வெளியான அறிவுறுத்தல்
மன்னார் பிரதேச செயலகப் பகுதிகளில் போலியான ஆவணங்களைத் தயாரித்து அரச காணிகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காணிகளை கொள்வனவு செய்யும் பொதுமக்களுக்கு விசேட அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அரச காணி என அறியாமல் போலியான ஆவணங்களை நம்பி காணிகளை கொள்வனவு செய்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

காணி கொள்வனவு
காணியொன்றை கொள்வனவு செய்வதற்கு முன்னர், குறித்த காணி தொடர்பான விபரங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆவணங்கள் உண்மையானவையா என்பதை மன்னார் பிரதேச செயலகத்தின் ஊடாக உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காணி கொள்வனவு செய்யும் நபர்கள் உரிய ஆவணங்களை முழுமையாக சரிபார்த்த பின்னரே கொள்வனவு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலியான ஆவணங்களை நம்பி காணிகளை கொள்வனவு செய்வதன் மூலம் பொதுமக்கள் எதிர்காலத்தில் சட்டரீதியான மற்றும் பொருளாதார ரீதியான சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், காணி கொள்வனவில் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.