சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம் ; கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள்
ஜோதிடத்தில் கிரகங்களின் தலைவனாக கருதப்படுபவர் சூரியன். அதே சமயம் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இவ்விரு கிரகங்களும் எதிரிகளாக கருதப்பட்டாலும், ஜோதிட நம்பிக்கையின்படி, சூரியனுக்கும் சனிக்கும் தந்தை-மகன் உறவு உள்ளது.

அந்த வகையில் சூரியன் செப்டம்பர் 17 ஆம் திகதி சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார். இந்நிலையில் சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இதனால் கன்னி ராசிக்கு சூரியன் செல்வதால், சூரியனுக்கும், சனிக்கும் இடையே சமசப்தம யோகம் உருவாகிறது. இப்போது சூரியன் மற்றும் சனியால் உருவாகும் சமசப்தம யோகத்தால் எந்த ராசிக்காரர்கள் அடுத்த 30 நாட்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 6 ஆவது வீட்டில் சூரியனும், 12 ஆவது வீட்டில் சனி பகவானும் இருந்து சமசப்தம யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதன் மூலம் வேலை பாதிக்கப்படும். கூட்டு தொழில் செய்பவர்கள் பண பரிவர்த்தனைகளை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை தலைவலி அல்லது செரிமான பிரச்சனைகளால் சிரமப்படக்கூடும்.

துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டில் சூரியனும், 6 ஆவது வீட்டில் சனி பகவானும் இருந்து சமசப்தம யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்காமல் ஏமாற்றமடையலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவசரப்படுவதைத் தவிர்த்து, பொறுமையாக இருக்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லாவிட்டால் எதிர்பாராத அளவில் மருத்துவ செலவை சந்திக்க நேரிடும். பேசும் போது நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். யோசிக்காமல் கண்டபடி பேசினால், உங்களின் நற்பெயர் தான் பாதிக்கப்படும். பண விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சனி பகவானும், 7 ஆவது வீட்டில் சூரியனும் இருந்து சமசப்தம யோகத்தை உருவாக்கியுள்ளனர். இதனால் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை பதற்றம் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். முக்கியமாக இக்காலத்தில் எந்த ஒரு நிதி முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் உங்களின் செயல்பாடுகள் உயர் அதிகாரிகளால் கவனிக்கப்படும். எனவே வேலைகளை கவனமாக செய்ய வேண்டும். அலட்சியம் பெரிய இழப்பை ஏற்படுத்தும். சிலர் மன அழுத்தத்தை உணரலாம்.
