அதிகரித்த மழைவீழ்ச்சி காரணமாக உயர்வடைந்துள நீர்மட்டம்!
தற்போது அதிகரித்த மழையுடனான வானிலையால் நில்வள கங்கை , ஜின் கங்கை மற்றும் களு கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
குக்குலே கங்க பகுதியில் அதிகளவிலான மழைவீழ்ச்சி இன்று (29.09.2023) காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பதிவாகியுள்ளது.
அங்கு 120 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடும் மழை காரணமாக களுத்துறை, இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் மாத்திரம் 2353 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நிலவும் கடும் மழையுடனான வானிலையால், 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, கண்டி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலக பிரிவுகளுக்கு 2ஆம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதுக்க - லியன்வல பிரதேசத்தில் நீரில் மூழ்கி 21 வயதான ஒருவர் காணாமற்போயுள்ளர்
பொலிஸாரும் கடற்படையினரும் இணைந்து காணாமற்போன இளைஞரைத் தேடும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.