இசை நிகழ்ச்சியால் கைதான கிளிநொச்சி இளைஞருக்கு விளக்கமறியல்!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நாவக்குளி பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் விடுதலைப் புலிகள் பாடல்கள் பாடியதாகக் கூறப்படும் சந்தேக நபர், யாழ்ப்பாணம் மாவட்ட குற்றவியல் விசாரணைப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளில், குறித்த சந்தேகநபர் தனது TikTok கணக்கில் அன்றைய தினம் பாடிய 04 பாடல்களை தொகுத்து, அவற்றை பதிவேற்றம் செய்திருந்ததும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, சந்தேகநபர் 1978 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் 03 (உ) பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் செய்ததாகக் கருதி, அவரது கைப்பேசியுடன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்றம், சந்தேகநபரை 2026.06.17 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் 24 வயதுடைய கிளிநொச்சி உதயநகர் பகுதியைச் சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றவியல் விசாரணைப் பணியகமும் சாவகச்சேரி தலைமையக பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றனர்.