யாழ்.செம்மணி புதைகுழியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடருமா?
யாழ்ப்பாணம், செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளது.
சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதி வழங்கப்பட்ட நிலையில், 32 ஆவது நாளுடன் அகழ்வுப்பணிகள் கடந்த 6 ஆம் திகதி இடைநிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், இன்று முதல் அகழ்வு பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதா, இல்லையா என்பது குறித்தே இன்றைய தினம் இடம்பெறவுள்ள வழக்கு விசாரணையின் போது தீர்மானிக்கப்படவுள்ளது.
முன்னதாக இடம்பெற்ற அகழ்வுப்பணிகளுக்கமைய 147 என்புக்கூட்டு தொகுதிகள் வெளிப்பட்டதுடன், அவற்றில் 133 என்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, செம்மணி பகுதியில் மேலும் மனித புதைகுழிகள் இருக்கலாம் என்பதற்கான சான்றுகள் இருப்பதாகவும், அதற்கமைய அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கு மேலும் 8 வார காலம் தேவைப்படுவதாகவும் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அதற்கமைய, ஸ்கேன் பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் இன்றைய தினம் அது குறித்தும் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்படவுள்ளது.