மஹரகம அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனைக்கு இளநீர் கொண்டு செல்ல தடை
மஹரகம அபேக்ஷா புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இளநீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் குறைபாடுகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இளநீர் விநியோகம்
அத்துடன் ,புற்றுநோயாளிகளுக்குப் பொதுவாக நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருக்கும் நிலையில் இளநீர் வழங்க வரும் வெளிநபர்கள் முகக்கவசம் அல்லது கையுறைகள் அணியாமல் தன்னிச்சையாக நோயாளர் பிரிவுக்குள் நுழைவதால், நோயாளர்களுக்குப் தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் அனுமதியின்றி, அவர்களைப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிடுவது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன் நோயாளிகளின் தனியுரிமையைப் பாதித்துள்ளது.
ஆனாலும், இளநீர் விநியோகம் முற்றிலும் தடை செய்யப்படவில்லை. விநியோகஸ்தர்கள் இளநீர்களை நோயாளர் பிரிவுகளுக்கு நேரடியாக கொண்டு செல்லக் கூடாது.
அதற்குப் பதிலாக, மருத்துவமனையின் முதன்மைச் சமையலறைக்குச் சென்று, அங்கிருக்கும் உணவுப் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
அங்கிருந்து அவை முறைப்படி நோயாளர்களுக்கு விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.