தமிழர் பகுதியில் கோடி பெறுமதியான ராவண கல் மீட்பு ; இருவர் கைது
திருகோணமலை - கிண்ணியா பகுதியில் இரண்டரை கோடி ரூபா (2.5 கோடி) பெறுமதியான அபூர்வ சுலைமான் கல் எனக் கூறப்படும் ‘ராவண கல்’ ஒன்றை விற்பனை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
கிண்ணியா மற்றும் மூதூர் பகுதிகளைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நேற்று (23) இரவு 10 மணியளவில் கிண்ணியா – கண்டி வீதியில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த அபூர்வ கல் மீட்கப்பட்டதுடன், அதனை விற்பனை செய்ய முயன்றதாக கூறப்படும் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட கல் 550 கிராம் நிறையுடையது எனவும், இது 4 அங்குல நீளமும், சுமார் 6.5 அடி சுற்றளவும் கொண்டதாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களையும் மீட்கப்பட்ட கல்லையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.