இலங்கையில் சீனப் பிரஜைகளின் நடத்தைகளால் பெரும் சர்ச்சை !
இலங்கையில் தங்கியுள்ள சீனப் பிரஜைகளின் நடத்தைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து நீண்டகாலமாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், அண்மைய நாட்களில் இடம்பெற்ற மூன்று முக்கிய சம்பவங்கள் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
கொழும்பு போர்ட் சிட்டி கடத்தல் மற்று சடலம் மீட்பு
ஜூலை 22ஆம் திகதி இரவு கொழும்பு போர்ட் சிட்டி பாலத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மூன்று சீனப் பிரஜைகளை, ஜூலை 23 அதிகாலை முகத்தை மூடி வேனில் வந்த 15 முதல் 20 பேர் கொண்ட குழுவினர் வலுக்கட்டாயமாகக் கடத்திச் சென்றனர்.

கடத்தப்பட்டவர்களில் இருவர் தாக்கப்பட்ட நிலையில் வீதியோரம் கைவிடப்பட்டனர். அவர்கள் மீட்கப்பட்டு கொழும்பு துறைமுகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். கடத்தப்பட்ட மூன்றாவது சீனப் பிரஜை குறித்த எந்தத் தகவலும் கிடைக்காததால், பொலிஸார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
எஹெலியகொடை, கரடான காட்டுப் பகுதியில் கண்கள், கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்ட நிலையில் சீனர் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், போர்ட் சிட்டியில் காணாமல் போன நபருக்கும் இந்தச் சடலத்திற்கும் தொடர்புள்ளதா என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
பேருவளையில் சீன வர்த்தகர்களின் விதிமீறல்
பேருவளையில் இரத்தினக்கல் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த சீனர்கள், முறையற்ற நேரத்தில் கடைகளைத் திறந்திருந்ததோடு, ஒப்பந்தங்களை மீறி மதுபானம் மற்றும் பன்றி இறைச்சி போன்றவற்றை அப்பகுதிக்குக் கொண்டு வந்ததால் உள்ளூர் வர்த்தகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
நிலமை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, விதிமீறலில் ஈடுபட்ட சீனர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
கொள்ளுப்பிட்டியில் 20 மில்லியன் திருட்டு
ஜூலை 21ஆம் திகதி கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் சீனப் பிரஜை ஒருவரிடமிருந்த 20 மில்லியன் ரூபா பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டாரவின் மகன் அனுத பண்டார உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் மற்றொரு சீனப் பிரஜைக்கும் தொடர்பிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் நிலையில், குறித்த பணம் வந்த வழிமூலம் குறித்தும் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.