கூச்சலிடுபவர்கள் முடியுமானவரை கூச்சலிடட்டும் ; கடும் உரையில் ஜனாதிபதி அனுர குமார
கொழும்பு நீதிமன்றத்தில் ரணிலின் பிணை மனு விசாரணை நடைபெறும் போது அரசுத் தலைவர் தோழர் அனுர குமார திசநாயகா தேசிய பிக்குமார் முன்னணியினரின் கூட்டத்தில் பேசிய உரையின் சாராம்சத்தை சமூக வலைதள பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அங்கு அவர் பேசிய விடயமானது,
"சகலரும் சட்டத்தின் முன் சமம். எவருக்கும் சிறப்பு சலுகை வழங்கப்படாது. ஊழல், மோசடி மற்றும் அரச நிதியை தவறாக பயன்படுத்தியவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் கொண்டு வரப்படுவார்கள். இது அரசியல் பழிவாங்கல் அல்ல," என அவர் தெரிவித்தார்.
கூச்சலிடுபவர்கள் முடியுமானவரை கூச்சலிடட்டும், அழட்டும். மக்களாணை அரச நிதியை மோசடி செய்யும் வரமல்ல என்பதை உறுதிப்படுத்துவோம்.இதற்கான சட்டங்கள் உருவாக்கப்படும் அரச நிர்வாகம் பல்வேறு கட்டமைப்பில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இது கடந்த காலங்களில் பிரதிபலனாகும். பிரதி பொலிஸ்மா அதிபரின் மனைவி புதையல் தோண்டுகிறார். பதில் பொலிஸ்மா அதிபர் அதனை பார்த்துக் கொண்டிருக்கிறார்.நாடு எங்கு செல்கிறது. இராணுவத்தின் பிரதான அதிகாரி புதையல் தோண்டியுள்ளார்.
இதற்கு பெண்ணொருவர் பலிகொடுக்கப்பட்டுள்ளாரா என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் எவ்வித அனுமதியுமில்லாமல் சிறைக்கைதிகள் சட்டவிரோதமான முறையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பாதாள குழுக்களின் தலைவர்களுக்கு கடவுச்சீட்டு வழங்கியுள்ளது.இராச்சியத்தின் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்பட வேண்டிய ஆயுதங்கள் இராணுவ முகாமில் இருந்து வெளியாட்களுக்கு விற்கப்பட்டுள்ளன.
டி-56 ரக 73 துப்பாக்கிகள் இராணுவ முகாமில் இருந்து வெளியில் சென்றுள்ளமை தற்போது அறிக்கையிடப்பட்டுள்ளன. அரச அதிகாரிகள் தமது பொறுப்பை பணத்தால் மதிப்பிட்டு முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளனர்.
இதனால் சமூக கட்டமைப்பும், பொருளாதாரமும் வீழ்ச்சியடைந்துள்ளன.விசாலமான கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றால் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. அரச அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்த அரசியல்வாதிகளுக்கு அனுமதியில்லை.
ஆட்சியாளர்கள் மக்கள் மத்தியில் மனசாட்சியுடன் செயற்பட வேண்டும்.ஆட்சியாளர்கள் அரச நிதியை முறைகேடு செய்து விட்டு மக்களிடம் சட்டத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள், உங்களின் கடமையை நிறைவேற்றுங்கள் என்று குறிப்பிட முடியாது.
மக்களாணை அரச நிதியை மோசடி செய்யும் வரமல்ல என்பதை உறுதிப்படுத்துவோம்.இதற்கான சட்டங்கள் உருவாக்கப்படும். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு இல்லம் வழங்கப்பட வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் சட்டத்தில் எவ்வித்திலும் வீட்டின் அளவு பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை.இதனால் ஆட்சியாளர்கள் தமது வீட்டை 35 ஆயிரம் சதுர அடியாக பெற்றுக்கொண்டார்கள்.இது நியாயமானதா,கொவிட் பெருந்தொற்கு காலத்தில் அந்த வீட்டை புனரமைப்பதற்காக 400 மில்லியன் ரூபா அரச நிதி செலவிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்புரிமைகளை எதிர்வரும் மாதம் முதல் வாரத்தில் இரத்துச் செய்வேன். நாட்டை திருத்த வேண்டுமாயின் இவ்வாறான கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.
அரச நிறுவனங்கள் அரசியலமைப்பினால் தமக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய செயற்பட வேண்டும்.பலதுறைகளில் வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு சட்டத்தின் ஊடாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என கூறியதாக சமூக வலைதள பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.