எரிபொருள் விலை குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைந்தாலும் உள்நாட்டில் எரிபொருள் விலைகள் உடனடியாகக் குறைக்கப்பட மாட்டாதென எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எண்ணெய் விலை
அமெரிக்கா - ஈரான் நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் 60 நாட்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாகக் குறைந்துள்ளன.
இருந்த போதிலும் உலக சந்தையின் புதிய விலை மாற்றங்கள், இலங்கை போன்ற நாடுகளுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் புதிய கொள்வனவுகள் மேற்கொள்ளப்படும் போதே சாதகமாக அமையும்.
அதுவரை தற்போதைய எரிபொருள் வழங்கும் கியூஆர் ஒதுக்கீட்டு முறைமை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.
தற்போது உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை சுமார் 80 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகின்ற போதிலும், தற்போதைய விலைகளை ஸ்திரமாகப் பேணுவதற்கு அரசாங்கம் தொடர்ந்து மானியங்களை வழங்க வேண்டியுள்ளது.
எரிபொருள் விலைகளை மாற்றமின்றி வைத்திருப்பதற்காக அமைச்சரவை ஏற்கனவே 47 பில்லியன் ரூபாவை வழங்குவதற்கு அனுமதி அளித்துள்ளதோடு கடந்த பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் மாத்திரம் எண்ணெய் மானியத்திற்காக 19 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.