சஜித்தின் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுஜன எம்.பி!
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்புரிமையை பெறும் எண்ணம் இல்லை எனவும் மாபெரும் எதிர்க்கட்சி கூட்டணியை அமைப்பதற்கு பாடுபடவுள்ளதாகவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி (Chandima Weerakkody) தெரிவித்துள்ளார்.

அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே தமது நோக்கம் என்றும் தற்போதைய அரசாங்கத்தை தோற்கடிக்க அனைத்து சரியான சிந்தனையுள்ள மக்களும் ஒன்று சேர வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் ஹினிதுமவில் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமா சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தலைமையில் சனிக்கிழமை (04-02-2023) இடம்பெற்ற கூட்டத்தில் சந்திம எம்.பி கலந்து கொண்டிருந்தமை குறித்து வினவியபோதே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் தெரிவித்தார்.

மாபெரும் எதிர்க்கட்சி கூட்டணியை உருவாக்குவதற்கான செயல்பாட்டின் ஒரு பகுதியாகவே தான் ஐக்கிய மக்கள் சக்தியின் மேடையில் ஏறியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் எதிர்நோக்கும் பட்டினியை முடிவுக்குக் கொண்டுவர எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாகவும் குறித்த மேடையில் அவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.