என்ன இப்படி இருக்கிறாரே....முதலமைச்சர் விஜய்யின் செயலால் ஆச்சர்யத்தில் அதிகாரிகள் !
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், ஒரு சாதாரண அரச உத்தியோகத்தரைப் போலக் குறித்த நேரத்திற்குப் பணிக்கு வருவது, அரச அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதலமைச்சராகக் கடந்த 10ஆம் திகதி பதவியேற்ற அவர், பதவியேற்பு விழா காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காலை 8:48 மணிக்கே நேரு உள்விளையாட்டு அரங்கிற்கு வருகை தந்திருந்தார்.

மதிய உணவையும் கையோடு எடுத்து வரும் முதலமைச்சர் விஜய்
அதனைத் தொடர்ந்து வந்த நாட்களிலும் அவரது நேர முகாமைத்துவம் அனைவரையும் கவர்ந்துள்ளது அதன்படி, சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வு காலை 9:30 மணிக்கு நிகழ்வு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், காலை 8:45க்கு அவர் தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சபாநாயகர் தேர்தல் நடைபெற்ற போது காலை 9:30 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் கலந்துகொள்ள, 8:55க்கே அவர் சட்டமன்ற மண்டபத்திற்குள் வந்துள்ளார். தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்ற வேலையில் காலை 9:30 மணிக்கு வாக்கெடுப்பு ஆரம்பமாவதற்கு முன்பாகவே, அதாவது 9:00 மணிக்கே அவர் செயலகத்தை வந்தடைந்துள்ளார்.
சபை ஆரம்பிப்பதற்கு 8 நிமிடங்களுக்கு முன்னரே அவர் தனது ஆசனத்தில் அமர்ந்ததாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
அத்துடன், மூன்று நாட்கள் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடர் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை 9:55 தலைமைச் செயலகம் வந்த முதலமைச்சர் விஜய், மாலை 4:00 மணி வரை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்தார்.
அதன் பின்னரே அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார். குறிப்பாக, அவர் தலைமைச் செயலகத்திற்கு வரும்போது மதிய உணவையும் கையோடு எடுத்து வருவதுடன், மதிய இடைவேளையின் போது அங்கேயே உணவருந்துவதாகவும், ஒரு சாதாரண அரச ஊழியரைப் போல நேரத்தைப் பின்பற்றுவதையும், எளிமையைக் கடைப்பிடிப்பதையும் கண்டு உயர் அதிகாரிகளும் பாதுகாப்புப் பணியில் உள்ள காவல்துறையினரும் வியப்படைந்துள்ளனர்.