PSTA சட்டம் PTA-வை விட பல மடங்கு ஆபத்தானது ; தவராசா விடுத்துள்ள எச்சரிக்கை
புதிய " அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் சட்டம்" (PSTA) பழைய சட்டத்தை விட பல மடங்கு ஆபத்தானது என ஜனாதிபதி சட்டத்தரணி கே. தவராசா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"மக்களை முட்டாள்கள் ஆக்கக் கூடாது, சீட்டை மாற்றுவது போல் ஆள் மாறக் கூடாது" என அரசாங்கத்திற்குச் சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்த புதிய சட்ட வரைவில் ஒளிந்திருக்கும் பாரதூரமான ஆபத்துகள் குறித்து விபரித்துள்ளார்.
2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததற்குப் பின்னர் இலங்கையில் ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கங்களும், சர்வதேசத்திற்கும் உள்நாட்டு மக்களுக்கும் வழங்கிய பிரதான வாக்குறுதி "பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) நீக்கப்படும்" என்பதாகும்.
ஆனால், நடைமுறையில் ஒரு அரசு அந்தச் சட்டத்தை நீக்குவதாகக் கூறிவிட்டு ATA (Anti-Terrorism Act) பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

மற்றொரு அரசு Counter-Terrorism Act-ஐ பயங்கரவாத தடுப்புச் சட்டம் கொண்டு வர முயன்றது. தற்போதைய அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சரும், "இப்படியான கடுமையான சட்டங்களை வைத்துக் கொண்டு தங்களுக்கு ஆட்சி செய்ய வேண்டிய அவசியமில்லை, எனவே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவோம்" என அண்மையில் அறிவித்திருந்தார்.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்க ஒன்றாக இருந்தாலும், இதன் பின்னணியில் அதைவிடப் பாரதூரமான சதி ஒன்று அரங்கேறி வருவதாக சட்டத்தரணி கே. தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) வெறும் 25 முதல் 28 பக்கங்களை மட்டுமே கொண்டிருந்த நிலையில், இந்த புதிய PSTA வரைவு 105 பக்கங்களைக் கொண்டு, படுகடுமையான அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
பழைய சட்டத்தின் பிரதான பிரிவான 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க சட்டத்தை அடிப்படையாக வைத்தே இந்த புதிய வரைவும் எழுதப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின்படி, ஒருவரது தடுப்புக்காவல் காலம் 18 மாதங்களில் இருந்து ஒரு வருடமாகக் குறைக்கப்பட்டிருந்தது.
ஆனால் புதிய PSTA சட்டத்தின் 28 ஆவது பிரிவின் கீழ், சந்தேகநபர் ஒருவரை ஒரு வருடம் தடுப்புக்காவலிலும், மேலும் ஒரு வருடம் சிறையிலும் என மொத்தம் இரண்டு வருடங்கள் தடுத்து வைத்திருக்க முடியும்.

இந்த சட்ட வரைவின் 39 ஆவது பிரிவின்படி, ஒருவருக்கு எதிராக சாட்சியம் இருப்பதாக காவல்துறையினர் சட்டமா அதிபருக்கு அறிக்கை அனுப்பி, மேல் நீதிமன்றத்தின் மூலம் உத்தரவைப் பெற்றால், விசாரணை முடியும் வரை (கைது செய்த நாளில் இருந்து இறுதி வரை) காலவரையறையின்றி சந்தேகநபரை தடுத்து வைக்க முடியும்.
பழைய சட்டத்தின் கீழ், பயங்கரவாதச் செயல் குறித்து தகவல் வழங்கத் தவறினால் அதிகபட்சமாக 7 வருட சிறைத்தண்டனை மட்டுமே விதிக்கப்பட்டது.
ஆனால், புதிய PSTA சட்ட வரைவின்படி, தகவல் வழங்கத் தவறினால் 7 வருட சிறைத்தண்டனையுடன் சேர்த்து 70 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம். ஒருவேளை தெரியாமல் தவறான தகவல் வழங்கப்பட்டால் 2 வருட சிறையும் 20 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் இன்னும் 2000 பேர் சிறையிலேயே அடைப்பட்டிருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்தையும் விட விசித்திரமான அம்சம் என்னவென்றால், வன்முறையற்ற சாத்வீக பொதுப் போராட்டங்கள் மற்றும் சிவில் சமூக செயல்பாடுகளைக் கூட பயங்கரவாதத்தின் கீழ் முடக்கும் ஆபத்தான பிரிவுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி தவராசா கவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி போராட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் பேஸ்புக்கில் பதிவிடல் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டுதல் என்பனவும் இந்த சட்டத்தின்கீழ் குற்றங்களாக கருதப்படும் என்று அவர் குறி்ப்பிட்டுள்ளார். இந்த குற்றத்துக்காக 20 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனையை வழங்குவதற்கும் சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) நீக்குவதாக வழங்கும் வாக்குறுதி உண்மையானதாக இருக்க வேண்டுமாயின், அதற்குப் பதிலாக அதைவிடவும் படுகடுமையான இந்த PSTA சட்ட வரைவை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொண்டு வரமாட்டோம் என்ற உறுதியான வாக்குறுதியையும் அரசாங்கத்திடமிருந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெற வேண்டும் என்பதே தற்போதைய பிரதான கோரிக்கையாகும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி தவராசா தெரிவித்துள்ளார்.