அஸ்வெசும பயனாளர்களின் கவனத்திற்கு ; பொய்யான தகவல்களுக்கு கடும் தண்டனை
அஸ்வெசும கொடுப்பனவு தகவல்களில் பொய்யான தகவல்கள் வழங்கும் அல்லது வழங்கிய பட்சத்தில் ஒரு வருட சிறை தண்டனை வழங்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அஸ்வெசுமவின் முதல் கட்டத்தின் கீழ், சலுகைகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் 2023/2024 ஆண்டுகளில் விண்ணப்பிக்காத அனைவரின் தகவல்களையும் புதுப்பிக்கும் பணியை நலன்புரி நன்மைகள் சபை ஏற்கனவே தொடங்கியுள்ளது.

இந்தச் செயல்முறைக்காக தகுதியான 2,993,558 நபர்கள் ஏற்கனவே தங்கள் தகவல்களைச் சமர்ப்பித்துள்ளனர். அவர்களின் தகவல்களைச் சரிபார்க்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு எதிர்வரும் 28 ஆம் திகதி முடிவடைய உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு ஒருவர் தவறான தகவல்களை வழங்கினால், அது நலன்புரிப் நன்மைகள் சட்டத்தின் பிரிவு 20 இன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
அத்தகைய சந்தர்ப்பத்தில் நீதிவான் முன்னிலையில், குற்றவாளியாகும் ஒருவருக்கு 5000 ரூபாய்க்கும் அதிகரிக்காத அபராதமோ அல்லது ஒரு வருடகால சிறை தண்டனையோ வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.