சதொசவில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகம் ; சானக மதுகொட குற்றச்சாட்டு
சதொச விற்பனை நிலையங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுவதுடன், வெளிச்சந்தையை விட சதொசவில் பொருட்களின் விலை அதிகமாகக் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சானக மதுகொட குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வாய்மூலக்கேள்வி நேரத்திலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சதொசவில் பொருட்கள் வாங்குவதற்காகச் செல்லும் நுகர்வோர் ஏமாற்றத்துடன் திரும்புவதாகவும், ஒரே வாரத்திற்குள் சீனி, பருப்பு மற்றும் அரிசி ஆகியவற்றின் விலை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தனியார் பல்பொருள் அங்காடிகளை விடவும் சதொசவில் பொருட்களின் விலை அதிகமாக இருப்பது அரசாங்கத்தின் நுகர்வோர் பாதுகாப்பு உறுதிமொழியைக் கேள்விக்குறியாக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய வர்த்தக அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, கடனில் மூழ்கியிருந்த சதொச நிறுவனத்தை தற்போதைய அரசாங்கம் மீட்டு எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.
கேள்விப்பத்திர முறையிலான கொள்முதல் தாமதங்களே பொருள் தட்டுப்பாடிற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக அனைத்து மாவட்டங்களிலும் மொத்த விநியோகக் களஞ்சியங்கள் அமைக்கப்பட்டு, வெளிச்சந்தையை விடக் குறைந்த விலையில் பொருட்கள் விநியோகிக்கப்படும் என உறுதியளித்தார்.