உடன் அமுலுக்கு வந்துள்ள ஜனாதிபதி வரப்பிரசாதங்கள் ரத்து சட்டம்
இலங்கை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு சான்றுரைப்படுத்தியுள்ளார்.
இதன்மூலம் ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டம் உடன் அமுலுக்கு வந்துள்ளது. ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் 2வது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு இன்று (10) பிற்பகல் இடம்பெற்றது.
150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம்
இந்த வாக்கெடுப்பில் பிரேரனைக்கு ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் அளிக்கப்பட்டன.
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க மாத்திரமே ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தார்.
பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இன்று முற்பகல் 11.30 முதல் பிற்பகல் 3.30 மணி வரையான காலப்பகுதியில் குறித்த விவாதம் இடம்பெற்றிருந்தது.
இறுதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதேவேளை முன்னதாக ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தின் சரத்துகள் அரசியலமைப்பின் எந்தவொரு உள்ளீடுகளுக்கும் முரணானது இல்லை என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் நேற்று பாராளுமன்றில் வௌிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.