பொருளாதார அடித்தளத்திலிருந்திற்காக ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு
வலுவான பொருளாதார அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெற ஏற்றுமதியாளர்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்தார்.
மிகவும் வலுவான நிலையிலிருந்து சந்தையைக் கைப்பற்றும் சவாலை நாம் எதிர்கொள்ளாததால், வேறொரு தரப்பிலிருந்து ஆதரவைப் பெற வேண்டியிருந்தது என்பதை நினைவுபடுத்திய ஜனாதிபதி, தற்போது உள்ள பொருளாதார ஸ்தீரத்தன்மையில் கைத்தொழில் அமைக்கப்பட்டுள்ள அடித்தளத்திலிருந்து மீண்டும் எழுச்சி பெறத் தனது அரசாங்கம் ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
26ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.
இலங்கை ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையினால் (EDB) ஏற்பாடு செய்யப்பட்ட 26ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் விழா இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இன்றைய சந்தை ஒரு உலகளாவிய சங்கிலியாக மாறியுள்ளதெனக் கூறிய ஜனாதிபதி, அதில் பங்குதாரராக மாறுவதற்கு, நாட்டுக்குச் சாதகமான வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டும் என்றும், பிடிவாதமாகத் தன்னிச்சையான குழந்தையைப் போலச் சந்தையை ஆக்கிரமிக்க முடியாது என்றும் வலியுறுத்தினார்.
தரமான சந்தையில் நுழைவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்கத் தனது அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருவதாக ஜனாதிபதி கூறினார்.
உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப புதிய பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதில் அரசாங்கம் சிறப்புக் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணங்களில் நிலையான குறைப்பைப் பேண புதுப்பிக்கத் தக்க எரிசக்தி குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என்றும், சில ஆண்டுகளுக்குள் செலவுகளைக் குறைத்து நிலையான விலையை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரத்தை மற்றுமொரு நிலைக்குக் கொண்டு செல்ல அரசாங்கம் அதிகபட்ச முயற்சிகளை மேற்கொள்ளும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
ஒரு சிறிய தவறு கூட பொருளாதாரத்திற்கு ஆபத்தான அடியாக அமையக்கூடும் என்பதால், பொருளாதாரம் தொடர்பான முடிவுகளை எடுக்கும்போது மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் என்ற வகையில் ஏற்றுமதியாளர்களின் கோரிக்கைகள் தற்போது போடப்பட்டுள்ள அடித்தளத்தைப் பாதிக்காத வகையில் முன்னெடுப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.
நாடு தற்போது பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்திற்குக் கவனமாக நகர்ந்து வருவதால், பரஸ்பர புரிதலுடன் இந்தக் கடினமான தடையைத் தாண்டுவதில் கைகோர்க்குமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.