E-8 விசா வேலைவாய்ப்பு மோசடி குறித்து வெளியான அறிவிப்பு
தற்போது செயல்பாட்டில் இல்லாத கொரிய E-8 விசா பிரிவின் கீழ் வேலைகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து, தனி நபர்களிடமிருந்து பணம் வசூலிக்கும் மோசடி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
E-8 தொழில் பிரிவின் கீழ் வேலைவாய்ப்பு அல்லது தொடர்புடைய பயிற்சிக்காக எந்தவொரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம், தனிநபர் அல்லது தனிநபர் குழுவிற்கும் இதுவரை எந்த ஒப்புதலையும் வழங்கவில்லை என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, எந்தவொரு வேலைவாய்ப்பு நிறுவனமோ, தனி நபரோ அல்லது தனிநபர் குழுவோ அத்தகைய செயலில் ஈடுபடுவதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என்றும், எந்தவொரு நிறுவனமோ அல்லது தனிநபரோ அத்தகைய செயலில் ஈடுபடுவது சட்டவிரோதமானது என்றும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.
அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் அல்லது ஆதரிக்கும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் அல்லது அப்படி இல்லாத வேலைவாய்ப்பு நிறுவனங்கள் என்ற போர்வையில் செயல்படும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் அல்லது இடைத்தரகர்களை, அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் கைது செய்ய வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்ட விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பணியகம் குறிப்பிட்டுள்ளது.
E-8 விசா பிரிவின் கீழ் செயல்பட எந்தவொரு தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கும் ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
E-8 விசாவின் கீழ் தென் கொரியாவில் வேலை செய்வதற்காக வெளிநாடு செல்லும் நோக்கத்துடன் இதுபோன்ற நிதி அல்லது பிற பரிவர்த்தனைகள் அல்லது செயல்முறைகளில் ஈடுபடும் எந்தவொரு இலங்கையரும் கொரியாவிலோ அல்லது வேறு எந்த
நாட்டிலோ வேலை செய்வதற்காக வெளிநாடு செல்ல முடியாமல் போகும் அவதானம் உள்ளதால் இதுபோன்ற மோசடி நடவடிக்கைகளுக்கு இரையாகவோ அல்லது ஆதரவளிக்கவோ வேண்டாம் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவுறுத்துகிறது.