தைப்பொங்கல் தினத்தில் ஜனாதிபதி அனுர யாழ் விஜயம் ; மீனவர் பிரச்சினைக்கு தீர்க்கமான நடவடிக்கை கோரல்
யாழ்ப்பாணத்திற்கு தைப்பொங்கல் தினமான 15ஆம் திகதி வருகை தரவுள்ள ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க யாழ். மாவட்ட மீனவர்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடி இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அகில இலங்கை கடத்தொழில் மற்றும் கமத்தொழில் சமாசத்தின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவருமான என்.பி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், இந்திய அத்துமீறிய இழுவை படகுகளினால் வட மாகாணம் குறிப்பாக யாழ் மாவட்ட மீனவர்கள் பெரும்பாலான பாதிப்புகளை தொடர்ச்சியாக அனுபவித்துக் கொண்டு வருகின்றனர்.
நாங்கள் பலமுறை ஆட்சியில் இருக்கின்ற ஜனாதிபதிகளுக்கும், இந்தியா தூதுவர்களுக்கும் கடற்தொழில் அமைச்சர்களுக்கும் மகஜர் கொடுத்து களைத்து விட்டோம்.

இந்த வாரமும் பருத்தித்துறைக் கடல் பரப்பில் இந்திய கடற்தொழிலார்களின் இழுவை மடிப் படகுகள் கரையை அன்மித்த பகுதி வரை சுதந்திரமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் சிலரை மட்டும் கடற்படையினர் கைது செய்கின்ற நிலையில் அநேகமான படகுகள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.
இதன் காரணமாக எமது மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதுடன் எமது கடல் எமக்கானதா? என்ற கேள்வியும் எழுகின்றது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு தடவைகளுக்கு மேல் வருகை தந்துள்ளார் யாழ்ப்பாணத்தில் முக்கிய பிரச்சினையாக இருக்கின்ற மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் மீனவ சமூகப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவதற்கு இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

அவர் எம்மை சந்திப்பதற்கு பின் நிற்பது இந்தியாவின் அழுத்தம் ஏதும் காரணமா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.
மேலும் கடந்த வருட இறுதியில் இடம் பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மீனவர்களுக்கு அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்கப்பெறவில்லை.
அனர்த்த நிலமைகள் தொடர்பில் பார்வையிட மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுர வடமாகாண மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு தெரிவித்த நிலையிலும் எமக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.
ஆகவே வடக்கு வரும் ஜனாதிபதி மீனவர்களுக்கு உரிய இழப்பீடு நிவாரணத்தை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு இந்தியா அத்து மீறிய மீன் பிடி தொடர்பில் எமது ஆதங்கங்களை முன்வைப்பதற்கு மீனவ சமூகத்தை சந்திப்பதற்கு உரிய ஏற்பாடுகளை உரியதரப்பினர்கள் மேற்கொண்டு தர வண்டும் என மேலும் தெரிவித்தார்