உலக வங்கி நிதி ஒதுக்கீட்டில் அரசியல் தொடர்புகள் ; பெயர் பட்டியலை வெளியிட்ட அமைச்சர்
உலக வங்கி கடன் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பெற்றதாகக் கூறப்படும் பல தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் பெயரை அமைச்சர் சமந்த வித்யாரத்ன வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பேசிய வித்யாரத்ன, இந்த நிதி விவசாயத் துறை வளர்ச்சியை ஆதரிப்பதற்காகவும், ஒரு பகுதி தொழில்முனைவோர் மற்றும் தொழில் தொடர்பான முயற்சிகளுக்காகவும் ஒதுக்கப்பட்டதாக கூறியுள்ளார்.
பெயரிடப்பட்டவற்றில், முன்னாள் அமைச்சர் தயா கமகேயின் மனைவி அனோமா கமகேவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு நிறுவனமும் இருந்தது, அது 14.95 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளது.

எனினும்,எந்த நிறுவனமும் நிதியை, திருப்பிச் செலுத்துதவில்லை என அமைச்சர் இதன் போது குற்றம் சாட்டினார். அத்துடன், அமைச்சர் தயா கமகேயின் கீழ் பணியாற்றிய முன்னாள் அமைச்சக செயலாளர் பந்துல விக்ரமாராச்சியின் மகன் 8.2 மில்லியன் ரூபா பெற்றதாகவும் வித்யாரத்ன கூறினார்.
அசாஹி கொன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் என்ற முன்னாள் அமைச்சர் ரோஷன் ரணசிங்கவின் மனைவிக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் நிறுவனம் 18 மில்லியன் ரூபா பெற்றது. முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொடவும் 18 மில்லியன் ரூபா பெற்றதாக பட்டியலிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்னவின் மகனுடன் தொடர்புடைய ஒரு நிறுவனம் 37.5 ரூபா மில்லியனைப் பெற்றது, அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் சகோதரருடன் தொடர்புடைய மற்றொரு நிறுவனம் 48.1 மில்லியனைப் பெற்றது என்று அமைச்சர் கூறினார்.
இந்த நிலையில், 2025 ஜூனில், உலக வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையை திருப்பிச் செலுத்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
உலக வங்கியால் கிடைக்கப்பெற்ற நிதியை மோசடி செய்தவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.