மண்ணெண்ணை பயன்படுத்திய நால்வர் அதிரடி கைது ; கைப்பற்றப்பட்ட பேருந்துகள்
மண்ணெண்ணெயை எரிபொருளாகப் பயன்படுத்தி இயக்கப்பட்ட 4 பயணிகள் பேருந்துகளை அம்பலாங்கொடை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.
அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி, பிரதான பொலிஸ் பரிசோதகர் லங்காதேவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் குழுவினர், நேற்று (07) மாலை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே இந்தப் பேருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலதிக விசாரணை
காலி - கொழும்பு மற்றும் அம்பலாங்கொடை - எல்பிட்டிய ஆகிய வழித்தடங்களில் சேவையில் ஈடுபட்டிருந்த நான்கு பேருந்துகளே இவ்வாறு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்துகளில் சில முற்றிலும் மண்ணெண்ணெயை மட்டுமே பயன்படுத்தி இயக்கப்பட்டிருப்பதும், மற்றையவை டீசலுடன் மண்ணெண்ணெயைக் கலந்து இயக்கப்பட்டிருப்பதும் இந்தச் சுற்றிவளைப்பின் போது தெரியவந்துள்ளது.
மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி இயக்கப்பட்ட இந்த நான்கு பேருந்துகளின் சாரதிகளும் பலப்பிட்டிய நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.