போலி வைத்தியர்கள் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
போலி சான்றிதழ்களை பயன்படுத்தி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.
காவல்துறை தலைமையகத்தில் நேற்று முன்தினம் (20241.04.03)அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் காவல்துறை மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்ட விரோத செயல்
இதன்போது வைத்திய துறையில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து பொலிஸார் கவனம் செலுத்தியிருந்தனர்.
குறிப்பாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ அடையாளத்துடன் கூடிய ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டி சிலர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அத்துடன், சான்றிதழ்கள், தரமற்ற மருந்துகள், வாசனைத் திரவியங்கள் மற்றும் பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் காவல்துறையினர் கவனம் செலுத்தியுள்ளனர்.
இவ்வாறான சில சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.