மட்டக்களப்பில் தமிழ் இன அழிப்பு வார நிகழ்வை பதிவு செய்த பொலிஸ் விரட்டியடிப்பு
தமிழ் இன அழிப்பு வாரம் திங்கட்கிழமை (12) மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு சிவிலுடையில் வந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம், வீடியோ எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களால் எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து வெளியேறினார்.
நினைவுத்தூபி அருகில் தமிழ் இன அழிப்பு வாரம்
மட்டக்களப்பில் சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் தமிழ் இன அழிப்பு வாரம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இதன்போது அங்கு சிவில் உடையில் வந்த கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் என்று தெரிவிக்கப்படும் ஒருவர், அங்கு நடைபெறும் நிகழ்வுகளையும் வந்தவர்களையும் வீடியோ எடுத்தார்.
இது தொடர்பில் அவதானித்த சமூக செயற்பாட்டாளர் , நாங்கள் அமைதியான முறையில் எங்கள் உறவுகளை நினைவுகூரும் வேளை ஏன் காணொளி எடுத்து மக்களை அச்சுறுத்துகின்றீர்கள் என் கேள்வி எழுப்பினார்.
இதன்போது அங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிநாத்தும் உங்களுக்கு இவ்வாறான செயற்பாடுகளை யார் செய்யச்சொல்லி அனுப்பியிருந்தார்கள் என்ற வகையான கேள்விகளை கேட்டபோது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அங்கிருந்து சென்றார்.
அரசாங்கம் இவ்வாறான நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடைகளை விதிக்காத போதிலும் பொலிஸார் நிகழ்வுகளை குழப்பும் வகையில் செயற்படுவதாக அங்கிருந்தவர்கள் விசனம் தெரிவித்தனர்.