அம்பாறையில் கொலை செய்யப்பட்டு வயல் காணியில் சடலமாக மீட்கப்பட்ட நபர்!
அம்பாறையில் வாங்காமம் பகுதியில் உள்ள வயல் காணியொன்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் விசாரணை தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் (23-12-2023) காலை இனம்தெரியாத நபரொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக இறக்காமம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினையடுத்து மேலதிக விசாரணைகளை பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
இந்நிலையில், அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 63 வயது மதிக்கத்தக்க முஹம்மது சித்தீக் ஹாஜியார் என்பவரே இவ்வாறு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை இறக்காமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வேலை ஒன்றினை முடித்த பின்னர் அதற்கான கூலி கொடுப்பதில் ஏற்பட்ட குளறுபடியே இக்கொலைக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த கொலை கடந்த வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற பின்னர் அருகில் இருந்த வீடு ஒன்றில் மறைக்கப்பட்டு சனிக்கிழமை அதிகாலை வேளையில் அருகிலுள்ள கரும்பு காணிக்குள் வீசப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (22-12-2023) காலை வாங்காமம் பகுதியில் உள்ள தனது பண்ணையை பார்வையிடுவதற்காக சென்றவர் வீடு திரும்பவில்லை என உறவினர்கள் தேடிச் சென்ற வேளை சடலமாக மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.