யாழில் பொலிஸாரின் கடமைக்கு இடையூரு விளைவித்த நபருக்கு ஏற்பட்ட நிலை!
யாழ்ப்பாணத்தில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து, பொலிஸ் அதிகாரியை தாக்கிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்கு வருமாறு,
குறித்த நபருக்கு பொலிஸார் அழைப்பு விடுத்த போதிலும், அவர் பொலிஸ் நிலையம் செல்லாததால், நேற்று வியாழக்கிழமை குறித்த நபரை கைது செய்வதற்கு, பருத்தித்துறை பொலிஸார், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் நபரின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது அவர் பொலிஸாருடன் முரண்பட்டு, பொலிஸாரை தாக்கியும் உள்ளார்.
இதனையடுத்து அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, அச்சுவேலியில் இருந்து மேலதிக பொலிஸார் அங்கு விரைந்து, பருத்தித்துறை பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டவரை கைது செய்து பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அச்சுவேலி மற்றும் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.