அம்பாறையிலும் ஹர்த்தாலை புறக்கணித்த மக்கள்!
இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்குமாறு இலங்கை தமிழரசுக் கட்சி விடுத்த வேண்டுகோளினை ஏற்று ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்த ஹர்த்தாலை முஸ்லீம் மக்கள் நிராகரித்து வழமையான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று (18) ஹர்தாலை முன்னெடுக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அம்பாறை கல்முனை, சவளக்கடை, சம்மாந்துறை, மத்தியமுகாம், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள் புடவைக்கடைகள் வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கியது.
சில பாடசாலைகளில் மாணவர் வரவு குறைந்துள்ள போதிலும் கற்றல் செயற்பாடு இடம்பெற்றதை அவதானிக்க முடிந்தது.
பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், அட்டப்பளம், சம்மாந்துறை, மாவடிப்பள்ளி, சவளக்கடை, மத்தியமுகாம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் அதிகரித்து வழமை போன்று செயற்பாட்டில் ஈடுபட்டனர்.
அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸாருடன் இணைந்து கடற்படை இராணுவம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர். அதேசமயம் சில இடங்களில் மட்டும் ஹர்த்தாலை அனுட்டிக்கபப்ட்டாதாகவும் கூறப்படுகின்றது.
அதேவேளை யாழ்ப்பாணத்திலும் பல இடங்களில் மக்கள் ஹர்தாலை புறக்கணித்து அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.